Pages

Monday 12 May 2014

முரண்பாட்டு மூட்டைகள்

என்  நீண்ட நாள் ஆசையில் ஒன்றான "கார் டிரைவிங்" ஐ கற்று கொள்ள  ஒரு வழியாக சமயம் அமைந்தது. பல இடங்கள் விசாரித்து , ரொம்ப  தூரம், ரொம்ப காஸ்ட்லி என்ற பல தடைகளை மீறி கடைசியாக "லேடீஸ் தான சொல்லி கொடுப்பாங்க?" என்ற முக்கியமான விஷயத்தை உறுதி  செய்த பிறகு, அந்த டிரைவிங் ஸ்கூலில் சேர்ந்தேன்.

அந்த "லேடி" ஒரு போலீஸ் ஆபிசரை போல் தான்  இருந்தார். முதல் நாள், கியர்  எப்படி போடுவது என்று சொல்லி  கொடுத்தார். "இது பழகவே உங்களுக்கு ஒரு வாரம் ஆகும்" , என்றார். இரண்டாவது நாள் எங்கள் தெருவில் இருந்து முன்னேறி மெயின் ரோட்டில்  ஓட்ட ஆரம்பித்தேன். காலை 6:30 மணி என்பதால் சாலைகள் காலியாகவே  இருந்தது.

 "மூணாவது  கியர் ல இருந்து நியுட்ரல் வந்துட்டு  தாங்க ரெண்டாவது கியர்  போடணும்.   நீங்க நேரா பின்னாடி போடுறீங்க. அது நாலாவது கியர்!" என்று என் அருகில் இருந்தபடி  அதட்டினார். எனக்கு ஒரே பதற்றமாக இருந்தது. "அய்யோ அப்படியா? ஸாரிங்க" என்றேன்.

கியர் எந்த நிலையில் இருக்கின்றது என்பதே எனக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. இவ்வாறு நான் பாதி குழப்பத்திலும் மீதி பயத்திலும் இருந்த போது, எங்கள் வண்டியை கடந்து ஒருவர் சைக்கிளில் கீரை விற்றுக்கொண்டு  சென்றிருக்கிறார்.

"இதுங்களுக்கு வண்டி பழக வேற எடமே கெடைக்காதா " என்று அவர் முனுமுனுத்தது என் காதில்  விழுந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் என் அருகில் இருந்தவரின் காதில்  நன்றாகவே விழுந்தது. அடுத்த சில நொடிகள் நடந்த நிகழ்வு - முதல் முறை வானவில் பார்த்த பொழுதோ, முதல் முறை இரயிலில் பயணம் செய்த பொழுதோ எப்படி நம் நெஞ்சில் என்றும் நீங்காமல்  பதிந்திருக்குமோ அது போன்ற ஒன்று நிகழ்வாக அமைந்தது - கிட்டத்தட்ட . முதல் முறையாக ஒரு பெண் சரளமாக கெட்ட வார்த்தை பேசுவதை நேரில் கண்டேன்.

"இது என்ன உன் அப்பன்  ரோடா? என்னமோ உன் மேல வந்து இடிச்ச மாதிரி பொலம்புற? கீழ இறங்குநேனா பிச்சிருவேன் ராஸ்கல் .. @#$%!&#%&# ..
ஏன்  நீ வண்டி பழக கிரௌண்டு கட்டி தாயேன் .. ம*****.. வந்துட்டானுங்க ..பொம்பளைங்க வண்டி ஓட்டுனா இவன்களுக்கெல்லாம் எளக்காரம் .. %@#$@!@.. என்ன வார்த்த பேசுற நீயு .. என்ன மொறைக்குற? ஓடிரு ..#*&#*#^(#)@ "

இந்த அர்ச்சனைக்கு நடுவில் என்னிடம், "ரெண்டாவது கியர் போடுங்க... கிலட்ச மிதிங்க.. அக்சிளிரேடர மெதுவா மிதிங்க" என்றெல்லாம் அவர் சொல்ல மறக்கவும் இல்லை. என் கைகள் ஸ்டீரிங் வீலில்  உறைந்தது. இங்கே இப்போது என்ன நடந்தது என்று ஒன்றும் புரியவில்லை. அந்த சைக்கிள் காரனோ மிரண்டுவிட்டான் . ஏதோ சந்தில் நுழைந்து எங்கள் பார்வையில் இருந்து மறைந்து விட்டான்.

சில நொடிகள் காரில் அமைதி நிலவியது. இது தான் புயலுக்கு பின் அமைதியோ? எதாவது பேசி இந்த மௌனத்தை கலைக்க வேண்டும். ஆனால் என்ன பேசுவது? அவரே பேச  ஆரம்பித்தார். "இவனுங்களுக்கெல்லாம் இப்படி தாங்க பதிலடி கொடுக்கணும்.. என்ன பயந்துட்டீங்களா?" என்று சிரித்தார்.

"இல்ல இல்ல.." நான் மிகவும் இயல்பாக இருப்பது போல் நடித்தேன்.

"நான் இவன மாதிரி நெறைய பேர பாத்திருக்கேங்க .. கிலட்ச அமுக்கி வண்டிய திருப்புங்க. பொம்பளைங்கனா சமயக்கட்டுலயே கெடக்கணும். வண்டி எல்லாம் ஓட்டுனா இவனுங்களால தாங்க முடியாது"

எனக்கு ஆச்சிரியமாக இருந்தது. பேருந்தில் , ரோட்டில் பெண்களை கேலி  செய்யும் ஆண்களை பார்த்திருக்கிறேன். ஆனால் அந்த சமயத்தில் என் இயலாமையை நினைத்து தான் வெட்கபட்டிருக்கிறேன் . அதற்கு மேல் எதுவும் செய்தது இல்லை. ஆனால் இந்த பெண் , ஒரு படி மேலே போய் , நடு ரோட்டில் சண்டையிட்டு அந்த ஆணை பயந்து ஓட வைத்து விட்டாரே! இதற்கும் தைரியம் வேண்டும் தான்.

அடுத்த நாள் நான் வண்டியில்  ஏறிய பொழுது அவரை ஒரு மரியாதையோடு (மரியாதை கலந்த பயம் என்று வாசிக்கவும் ) பார்த்தேன்.

"50 லட்டு ஆர்டர் பண்ணி கான்செல் பண்ணிட்டேங்க " என்றார்.

"ஏங்க லட்டு நல்ல இல்லையா?"

"அட ஏங்க நீங்க வேற.. என் பொண்ணு 952 மார்க்கு தாங்க வாங்கிருக்கு பிளஸ் டூ ல .. 1000 ஆவது வாங்கும்னு நெனச்சேன். கட் ஆப் வேற 155 தான். என்ன படிக்க ஒண்ணும் புரியல .. பிஎஸ்சி ஐடி எப்படிங்க ?"

"மொதல்ல அவளுக்கு என்ன விருப்பம்னு கேளுங்க..அதையே படிக்க வைங்க" என்றேன்.

"ம்க்கும் .. அவளுக்கு பேஷன் டெக்னாலஜி படிக்கணுமாம் .. ஹோட்டல் மானேஜ்மன்ட் படிக்கணுமாம்.. பொம்பள புள்ளைக்கு எதுக்கு இந்த படிப்பெல்லாம்.. துணி தைப்பாங்க .. அங்க புடிக்குது இங்க  புடிக்குதுன்னு கைய வைப்பாங்க .. தேவையா.. என்ன கேட்டா காலேஜுக்கே அனுப்ப வேண்டாம்னு தான் சொல்லுவேன்.. நீங்க வண்டிய ஸ்டார்ட் பண்ணுங்க "

ஏனோ வைரமுத்துவின் வரிகள் நினைவிற்கு வந்தது. அவர்  கூறவது போல சிவாஜி படத்தில் வரும் ஷ்ரேயா மட்டும் அல்ல, நாம் அனைவருமே ஒரு வகையில் முரண்பாட்டு மூட்டைகள் தான்.

1 comment:

Dharmanayagam pillai S said...

ஊருக்கு உபதேசம் என்போமே அது இதுதான்
Dharmanayagam